இலங்கை அணுசக்தி சபை 2014 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்திச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. 1969 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரசபைச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டு, 2015 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அணுசக்தி சபை நிறுவப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ் இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைச் சபை ஆகிய இரண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளுக்காக அணுவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகளை மேம்படுத்துவதும் அவற்றை எளிதாக்குவதும் இலங்கை அணுசக்தி சபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைச் சபை மேற்கொள்கிறது.

இலங்கை அணுசக்தி சபை தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்பத் திறன்களைப் பெற்றுக்கொண்டு தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கை அணுசக்தி சபைக்கு சட்டரீதியாக ஒப்படைக்கப்பட்டுள்ள கட்டாயப் பணிகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதுடன், தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தரத்தை உயர்த்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகளையும் வழங்கி வருகிறது.

இலங்கை அணுசக்தி சபையின் முக்கிய நோக்கங்கள்:

  • அணுத்தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகளை மேம்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குதல்.
  • தேசிய நோக்கங்களை அடைவதற்காக அணுவியல் விஞ்ஞானம் மற்றும் அணுத்தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • அணுத்தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகளின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான புதிய முறைகள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்தி அவற்றுக்கு ஆதரவளித்தல்.
  • அணு பயன்பாடுகள் தொடர்பான ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கதிர்வீச்சுப் பாதுகாப்பு தொடர்பான சேவைகளை வழங்குதல்.
  • வணிக அல்லது ஏனைய நடவடிக்கைகளுக்காக அயனியாக்கும் கதிர்வீச்சு மற்றும் தொடர்புடைய துணைத் தொழில்நுட்பங்கள் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுதல்.